மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக இல்லாமல் பாஜக மட்டுமே பிரதானமாக இருப்பதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் விமர்சித்தார். எம்ஜிஆர் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவில் பெரியார் படம் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் இன்று முதல் நடைபெற்று வருவதாகவும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களை தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் இருந்த தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், மதுரையில் மாநாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள அனைத்து பதாகைகளிலும் அதிமுக போஸ்டர்கள் இல்லாமல் பாஜக போஸ்டர் போல தெரிகிறது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைவர்கள் படம் இல்லாமல் பாஜக தாங்கிய போஸ்டர்களாகவே உள்ளன. எம்ஜிஆர் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவில் பெரியார் படத்தை முகப்பில் வைக்க முடியாத சூழல் வருத்தத்திற்குரியது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆளுமை மிக்க தலைவராக விஜய் இருப்பதாகவும் தமிழகத்தில் இது போன்ற ஒரு எழுச்சி எந்த ஒரு தலைவருக்கும் இருந்ததில்லை எனவும் தெரிவித்தவர். இந்த தேர்தல் களத்தில் தவெக வருகையால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.