2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டது. அப்போது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளைப் பெற்றார். இதனையடுத்து ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ பதவியை இழந்த பெரிய கருப்பன் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு ஒன்று, வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக சென்றுவிட்டது. அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத் தொகுதி 185-இல் சேர்க்க வேண்டும் என திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், மே 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் மே 12 அன்று அளித்த தீர்ப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக வேட்பாளருக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் TVK சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தவெக சார்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் பிழையானது என்றும், எனவே அத்தீர்ப்பின் மீது கடுமையான கண்டனக் குறிப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
பெரிய கருப்பனுக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட ஒரு தபால் வாக்கு, தவறுதலாக 50-வது தொகுதிக்குச் சென்று சேர்ந்துவிட்டது. அந்தத் தபால் வாக்கு மட்டும் எண்ணப்பட்டிருந்தால், தேர்தல் முடிவு சமநிலையில் (tie) முடிந்திருக்கும் என்று பெரிய கருப்பன் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ரோஹத்கி கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குழு இது மிகவும் மோசமானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.ஆர். பெரிய கருப்பன் தாக்கல் செய்திருந்த மனு மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.