தவெக தலைவர் விஜய்  முகநூல்
தமிழ்நாடு

"எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும்..."-தங்கைகளுக்கு அண்ணன் விஜய் எழுதிய கடிதம்!

எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும், அரணாகவும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன் என அண்ணா பல்கலைகழக பாலியல் விவகாரத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது முதல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது வரை பல விஷயங்கள் நடந்துள்ளன. இதனால், தமிழகத்தில் பல பகுதிகளில் அரசியல் தலைவர்கள் ,மகளிர் அமைப்புகள் என பலர் தங்களின் எதிர்ப்புக்குரல்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், எல்லா சூழல்களிலும் அண்ணனாகவும், அரணாகவும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன் என அண்ணா பல்கலைகழக பாலியல் விவகாரத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

இதில், “ அன்புத் தங்கைகளே!

கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று.. பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்.

- உங்கள் அன்பு அண்ணன், விஜய்.”

என்று தெரிவித்துள்ளார்.