விசிக மற்றும் இடதுசாரிகள் Pt web
தமிழ்நாடு

ஆட்சி அமைக்க ஆதரவு | விசிக, இடதுசாரிகளுக்கு தவெக கடிதம்.. உடைகிறதா திமுக கூட்டணி?

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Premkumar S

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கனவே, 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதவளிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படும் நிலையில் தான், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 6 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர்.

தலைமைச் செயலகம்

இவர்கள் ஆதரவளித்தாலே, ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைத்துவிடும் என்னும் சூழலில் தான், இந்த 3 கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் தற்போது கடிதம் எழுதியுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து இந்த மூன்று கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

எனினும், இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு ஆதரவளிக்காத சூழல் ஏற்பட்டால், பாமக 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறது. எனவே, அந்தக் கட்சியை தவெக அணுகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் 40 பேர் சிவி சண்முகம் தலைமையில் தவெகவுக்கு ஆதரவளிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில், அதிமுக இரண்டாக உடைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில்தான், விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அவர்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன்பிறகு, தவெகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும்.