மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சார்ந்த 35 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் இலங்கை கப்பற்படை நேற்று கைது செய்துள்ளது. தொடர்ந்து, 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது. இவ்வாறு, தமிழக மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் இலங்கை கப்பற்படை கைது செய்த 35 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.