தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய்க்கும் அவருடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் 'ஆண்டவன் மீது ஆணையிட்டு' என்று கூறி பதவி ஏற்றுக்கொண்டார்கள். தவெக தரப்பில் அமைச்சராக பதவி ஏற்ற ஆதவ் அர்ஜூனா மட்டுமே 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறி பதவி ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் MLA-க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதல் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் விஜய் பதவி ஏற்ற நிலையில், அவர் 'ஆண்டவன் மீது ஆணையிட்டு' என்று சொல்லி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறி MLA-வாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, 'ஆண்டவன் பெயரால் ஆணையிட்டு' அல்லது 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறி பதவி ஏற்கலாம். இந்தியாவில் ஆரம்பத்தில் கடவுள் மறுப்பு கொண்ட கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறி பதவி ஏற்றனர். அதே ்போல முன்னாள் பிரதமர் நேரு மற்றும் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுபவர்களும் 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறியே பதவி ஏற்றனர்.
அதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுகவின் உறுப்பினர்களும் 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறி பதவி ஏற்றனர். அப்போதில் இருந்து இப்போதுவரை திமுக உறுப்பினர்கள் அனைவரும் 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறியே பதவி ஏற்று வருகின்றனர். அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறியே பதவி ஏற்றாலும், அதிமுக கட்சியை உருவாக்கி முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 'ஆண்டவன் பெயரால் ஆணையிட்டு' என்று கூறி பதவி ஏற்றார்.
அவரைப் பின்பற்றி அதிமுக உறுப்பினர்கள் தற்போது வரை 'ஆண்டவன் பெயரால் ஆணையிட்டு' அல்லது 'கடவுளறிய' என்று கூறியே பதவி ஏற்று வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜயும் முதலமைச்சராக பதவி ஏற்றபோது, 'ஆண்டவன் பெயரால் ஆணையிட்டு' என்று கூறி பதவி ஏற்றாலும், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றபோது, 'உளமாற உறுதி கூறுகிறேன்' என்று கூறி பதவி ஏற்றுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு திமுகவின் திராவிட, இடதுசாரி பாரம்பரியத்தையே தவெக தலைவர் விஜயும் தொடர்வதாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் எதிர்காலத்தில் விஜய் எந்த வார்த்தையை கூறி பதவியேற்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே அவரின் நிலைப்பாடு குறித்து உறுதியாகக் கூற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.