விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் தவெக அமைச்சர்களின் பேச்சு, ராகுலை பிரதமர் முகமாகக் காணும் காங்கிரஸுடன் நேரடி முரண்பாட்டை உருவாக்கியுள்ளது. சில அமைச்சர்கள் இது குறித்து பதில் அளிக்கத் தவிர்க்க, இன்னும் நேரம் உள்ளது எனக் கூறினாலும், கூட்டணி அரசின் நிலைமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. வருகிற 9ம் தேதி நடைபெறும் தவெக ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரம் முக்கிய விவாதமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை கைப்பற்றியது. பின்னர் காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியைப் பிடித்தது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதோடு விஜய் பிரதமரானால் நாடு முன்னேறும் என்றும் வட மாநிலங்களில் தீவிர பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தச் சூழலில் தவெக அமைச்சர்கள், MLA-கள் ஆகியோர் விஜய் இந்தியாவின் பிரதமராவார் என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் ஆகியோர் அடுத்த பிரதமர் விஜய்தான் என பேசினர்.
தவெக அமைச்சர்களின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் வெங்கடரமணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்சி தலைமை இது குறித்து எதுவும் கூறவில்லை, 2029-ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேர்தல் நேரத்தில் அது தொடர்பான முடிவுகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் கூறினார்.
மேலும் பிரதமர் வேட்பாளர் குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள் என கூறி அவர் பதிலளிக்காமல் சென்றார்.
தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் விஜயா? ராகுல் காந்தியா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் அதனை முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதன் மூலம் தவெக அமைச்சர்கள் இன்னும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. ஆதரவு கட்சிகளுடன் வருகிற 9ம் தேதி தவெக ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.