கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்ட தொண்டர்களில் தற்போது 33 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய், தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் கூட்டம் ஆரம்பம் முதலே அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால், மருத்துமனையில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து பரப்புரை முடிந்து கூட்டம் கலைந்த நிலையில் மேலும் பலர் மயக்கமடைந்தனர். இதனால் ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து கரூர் மருத்துவமனையை நோக்கி விரைந்தபடியே இருந்தன. இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின. பின்னர், கொஞ்ச நேரத்தில் அது 29 ஆக உயர்ந்தது என தகவல் வெளியானது. இது மேலும் உயரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை அந்த எண்ணிக்கை 33 எனக் கூறப்படுகிறது. ஆனால், இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பிரேத பரிசோதனை அறைக்கு உயிரிழந்தோரின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதனால், உறவினர்கள் கதறி அழுகின்றனர். மேலும், தொடர்ந்து மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த துயர நிகழ்வால் கரூரே சோகத்தில் மிதக்கிறது; கண்ணீரில் நனைகிறது.
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில் இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டிருக்கும் பதிவில், “கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது; முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருச்சியில் இருந்து Medical Team கரூர் செல்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நாளை முதல்வர் கரூர் செல்லவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அடுத்தகட்டமாக இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 29-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழப்பு; பலர் காயம் என வரும் செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உதவிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும், அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.