karur pt
தமிழ்நாடு

தவெக பரப்புரை | கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு? சோகத்தில் மூழ்கிய கரூர்!

கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்ட தொண்டர்களில் 29 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

Prakash J

கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்ட தொண்டர்களில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கிய தவெக தலைவர் விஜய், அதன் தொடர்ச்சியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் பரப்புரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்டு கரூருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் கூட்டம் ஆரம்பம் முதலே அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மேடையில் பேசிக் கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், உடனே பேச்சை நிறுத்திவிட்டு கீழே நடக்கும் நிலை குறித்து விசாரித்தார். அப்போது தொண்டர்கள் தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைத் தூக்கி வீசினார். பின்னர் மயக்கம் அடைந்தவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வரச் செய்வதற்கு உத்தரவிட்டார்.

பின்னர் ஆம்புலன்ஸ் வந்த நிலையில், மறுபுறம் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். ஆனால், தொண்டர்களின் தள்ளுமுள்ளு காரணமாக, ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். பின்னர், ஒருவழியாக ஆம்புலன்ஸ் சென்ற நிலையில், தன்னுடைய பேச்சைத் தொடர்ந்து பேசி முடித்தார். இறுதியில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக அறிவித்துவிட்டு பரப்புரை பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். இதற்கிடையே பரப்புரையில் சிக்கி மயக்கம் ஏற்பட்ட பலரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக, பரப்புரை நடந்த இடத்தில் கூட்டம் கலைந்தபிறகு தள்ளுமுள்ளுவால் பலரும் கீழே மயக்கமடைந்தனர். இதனால் தவெகவின் பரப்புரை நடைபெற்ற இடமே களேபரமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பெண்களும் கரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உள்ளனர். கூட்டம் கரூர் மருத்துவமனையில் அலைமோதுவதால் அங்கு துயரமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிருக்குப் போராடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதில் 29 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தமிழக ,முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் @Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.