திருத்தணி தவெக வேட்பாளர் web
தமிழ்நாடு

திருத்தணி| தனி ஒருவராக ஓட்டு கேட்ட தவெக வேட்பாளர்.. என்ன காரணம்..?

திருத்தணியில் தவெக வேட்பாளர் சத்திய குமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது..

PT WEB

திருத்தணி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வழக்கறிஞர் சத்தியகுமார் தனியாகவே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக, அதிமுக-பாஜக, தவெக, நாதக மற்றும் சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்

அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழக்கறிஞர் சத்தியகுமார் போட்டியிடுகிறார். இந்தசூழலில் இன்று திருத்தணி நகரம் முழுவதும் அவர் தனி ஒருவராக வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனியாக சாலையில் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியதோடு பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

தனியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட என்ன காரணம்..?

சத்திய குமார் திருத்தணியில் உள்ள இளைஞர்களை கஞ்சா பார்ட்டிகள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசியதாகவும், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனி ஒருவராக சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் தெரிகிறது.

சத்திய குமாரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் எனவும், தொடர்ந்து இவர் வேட்பாளராக இருந்தால் இவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், அவர் தனியாக ஓட்டு சேகரித்ததாக தெரியவந்துள்ளது.