தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன்படி, சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 2 தேர்வும், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2A தேர்வும் நடைபெறுகிறது. அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல லட்சம் தமிழக இளைஞர்கள் ஆண்டு தோறும் குரூப் தேர்வுகளை எழுதி வருகின்றனர். தேர்வில் தோல்வி அடையும் போது மீண்டும் படித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், 828 அரசுப் பணியிடங்களுகாக கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-ன் முதல் நிலைத்தேர்வு நடந்தது. மொத்தமாக, 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில் குரூப் 2-இல் 1126 பேரும், குரூப் 2 ஏ-இல் 9,457 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தநிலையில் தான், தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவது இன்று நடைபெறுவதாக இருந்தது.
இதையடுத்து, இன்று தேர்வு நடைபெறுவதற்கு போகும் முன் தேர்வர்களுக்கு தேர்வுமையங்கள் குறிப்பிட்டு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு எழுதப் போகும் போது திடீரென தேர்வு மையங்கள் மாற்றப்பட்டிருந்தது தேர்வர்களுக்கு தெரிய வந்தது. நந்தனம் தேர்வு மையத்தில் வினாத்தாளே வரவில்லை எனவும் புகாரெழுந்து. இதையடுத்து தேர்வெழுதச் சென்றவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேர்வு மையங்களில் நடந்த குளறுபடிகள் காரணமாக இன்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.