சென்னை | கடும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்.. 7 விமானங்கள் நிறுத்தி வைப்பு!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவிவருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். மேலும், பனிமூட்டம் காரணமாக அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் மின்சார ரயில்கள் 10 முதல் 15 நிமிட காலதாமதத்தில் இயக்கப்பட்டன. இதன்காரணமாக, வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விமான சேவை பாதிப்பு!
மேலும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 4 விமானங்கள் கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய 7 விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், காற்றில் நிலவும் மிதமான வெப்பநிலையே பனிமூட்டத்துக்கு காரணம் எனவும் இன்னும் 2 நாட்களுக்கு அதிகாலை பனிமூட்டம் தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

