ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழில் முதலீட்டுக் கழக தலைவராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தொழில் முதலீட்டுக் கழக தலைவராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மற்றும் அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தனர். அதேபோல், சுகாதாரத் துறைச் செயலராக தாரேஷ் அகமதுவையும், மீன்வளத் துறைச் செயலராக அனு ஜார்ஜ்ஜையும் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. மேலும், மகளிர் உரிமைத் துறை செயலராக மரியம் பல்லவி பல்தேவும், TNPL எனப்படும் செய்தித்தாள், ஆவணங்கள் நிறுவன மேலாண் இயக்குநராக குமார் ஜெயந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழக உளவுத் துறை ஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அவரை உளவுத் துறை ஐஜியாக இடமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அவர், தென் மண்டல ஐஜி, சென்னை காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்திருந்தார். கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க, அவரது தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.