ஆளுநர் ஆர்.என் ரவி கோப்பு படம்
தமிழ்நாடு

”உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்; ஆனால் கல்வித் தரம் இல்லை” - ஆளுநர் ஆர்.என் ரவி!

இந்திய அளவில் உயர் கல்வி சேர்ப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும் தரமான கல்வி தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

PT WEB

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இன்று (ஜனவரி 18) ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ’பான் ஐஐடி டெக்4பாரத்’ என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்; இசைஞானி இளையராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், இக்கருத்தரங்கில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உட்பட பல்வேறு ஐஐடிகளின் இயக்குநர்கள் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்பவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாக இருந்தாலும், கல்வியின் தரம் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், ”இந்திய ஐஐடி-கள் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்தும் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா அவர்கள் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

’பான் ஐஐடி டெக் 4 பாரத்’

4-வது பொருளாதார நாடு

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று, உலக அளவில் 4வது பொருளாதார நாடு என்ற நிலையை அடைந்துள்ளது. விரைவில், 3ஆவது பொருளாதார நாடாகவும் மாற உள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு 30 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 5 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், இந்தியா சுயசார்பு தொழில்நுட்பத்தை நோக்கிப் பயணித்து வருகிறது.

இந்தியாவில் ஐஐடிகள் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், கல்வியின் மூலமாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஆட்களைதான் தயார் செய்து வந்துள்ளோம். இனிமேல் நாம், நாட்டிற்குப் பயன்படும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். இது ஒருபுறம் என்றால் தமிழ்நாட்டினுடைய நிலைதான், தற்போது வருத்தமளிப்பதாக இருக்கிறது.

தமிழ்நாடு உயர்கல்வி குறித்து:

தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னேறிய நிலையில் உள்ளது. ஜி.இ.ஆர் அடிப்படையில் பார்த்தால், உயர்கல்வி சேருபவர்கள் தமிழ்நாட்டில் 50 சதவீதம் அளவுக்கு உள்ளது. இது இந்திய சராசரியைவிட மிக அதிகம். தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பொறியாளர்கள் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இந்தியாவின் மொத்த பொறியியல் மாணவர்கள் எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள்.

அதேபோல, நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக பிஎச்டி முடிக்கிறார்கள். ஆனால், கல்வியில் எத்தனை சாதனைகளை செய்தாலும் முதலீடுகளை ஈர்ப்பதை பொறுத்தவரையில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30 சதவீதம் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்தன. ஆனால், இப்போது 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது‌.

ஆளுநர் ஆர்.என். ரவி

குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சியிலும் பின்னோக்கி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டில் கல்வியின் தரம் என்பது போதுமான அளவில் இல்லை என்பதால்தான். அதாவது, தமிழ்நாட்டில் இருந்து பள்ளிகளில் படிக்கக்கூடிய 70 சதவீதம் மாணவர்கள் அறிவியல் படிப்பிலும், 30 சதவீதம் மாணவர்கள் கலை படிப்பிலும் சேர்ந்து படிக்கிறார்கள். அதேவேளையில், பள்ளியை முடித்து கல்லூரி சேரும்போது அதற்கு நேர்மாறாக 70 சதவீதம் பேர் கலைசார்ந்த படிப்புகளிலும், 30 சதவீதம் பேர் அறிவியல் சார்ந்த படிப்புகளிலும் சேர்கிறார்கள். இங்கேயே பிரச்சினை தொடங்கி விடுகிறது.

மேலும், உயர் நிலையில் படிக்கும் பள்ளி மாணவர்கள்கூட 2ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடியாத நிலை உள்ளனர். அதன்பிறகு, பார்த்தால் பொறியியல் கல்வி முடித்த மாணவர்கள் தகுதி பொறியாளருக்கான தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பொறியியல் கல்லூரிகளில் 45 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அப்படியே பணியாற்றும் ஆசிரியர்களில் பலரும் போதிய தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் அங்கு தரமான கல்வி என்பது இல்லாத நிலையே இருக்கிறது. இதன் காரணமாகவே, தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகம்

அதேபோல, பிஎச்டி அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் இருந்து முடித்தாலும், நெட் போன்ற தேர்வுகளில் தகுதி பெற முடியாமல் இருக்கிறார்கள். தேசிய அளவில் கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டினுடைய கல்வி நிறுவனங்கள் அதிக இடங்களைப் பிடித்தாலும் அவற்றில் மத்தியக் கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள்தான் அதிகமாக வருகின்றன. மாநிலப் பல்கலைக்கழகங்கள் குறைந்த அளவிலேயே இடம்பெறுகின்றன.

இந்தியாவிலேயே, மாநிலப் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது. ஆனால் இங்கு கல்வியில் தரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்களை முன்னேற்ற வேண்டும். தமிழகத்தின் கல்வி தரமானதாக மாறினால்தான் சிறந்த பொறியாளர்களையும், சிறந்த மாணவர்களையும் உருவாக்க முடியும்” என தெரிவித்தார்.