மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழிக்கொள்கை தொடர்பாகவும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதுதொடர்பாகவும் பேசிய கருத்துகள்தான் தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தவிர மற்ற பெரும்பாலான அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்க வேண்டுமெனவும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில், இந்தி திணிப்பு என திமுக பொய்யான பரப்புரையை செய்வதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்பதாக தெரிவித்திருந்தார். மும்மொழி கற்க வேண்டும் என்பது மட்டுமே அக்கொள்கையின் நோக்கம், இந்தி திணிப்பு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும் பொழுது, தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க கூடாதா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் சார்பில், அண்ணாமலையின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அரசுப் பள்ளிக்கு ஒரு பாடத்திட்டம் , தனியாருக்கு ஒரு பாடத்திட்டம் என்று இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான சீரான கல்வியைக் கொடுக்கும் உயரிய நோக்கத்தில், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார்.
தமிழ்நாட்டில் கட்டாய மொழித்திணிப்பை எதிர்க்கும் நமது அரசு, விரும்பி படிக்க எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அவ்வகையில் தனியார் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயம் என்ற சூழல் இல்லை .
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் : 58,000
அதில் தனியார் பள்ளிகள் சுமார் : 12,690
இதில் சிபிஎஸ்சி பள்ளிகள் வெறும் : 1,835
இதில், சிபிஎஸ்சி பள்ளிகள் தவிரக் கட்டாய இந்தி பாடம் எங்கும் இல்லை ! பிற தனியார் பள்ளிகளில் எந்தப் பொதுத் தேர்விலும் இந்தி கிடையாது . ஆக, தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயம் .
சிபிஎஸ்சி, பிற மாநிலங்களில் மாறிச் செல்ல வாய்ப்புள்ள குழந்தைகளுக்காக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட திட்டம். எங்குச் சென்றாலும் ஒரே பாடத்திட்டத்தைத் தொடர உதவும். அதன் நோக்கம் வேறு.
நிலை இவ்வாறு இருக்க, பல லட்சம் மாணவர்கள் இந்தி படிப்பதாக மனம் போன போக்கில் ஒரு தப்புக் கணக்கை உருவாக்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தைப் பரப்ப முயலுவது தவறு” எனத் தெரிவித்துள்ளது.