விஜய் Pt web
தமிழ்நாடு

நெம்மேலி | கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. விரிவாக்கப் பணியை பார்வையிட்ட முதல்வர் விஜய்!

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட விரிவாக்கப் பணிகளை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்

Premkumar S

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் 2,465 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3ஆவது ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் விஜய், திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் விநியோகக் கட்டமைப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு முதல்வர் வழங்கினார்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

ஏற்கனவே, இந்த திட்டத்தின் கீழ் 2 கட்ட ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. முதல்கட்ட ஆலை, நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் (MLD) கடல் நீரை குடிநீராக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டது. இது பல ஆண்டுகளாக தென் சென்னை பகுதி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. தொடர்ந்து, கூடுதல் குடிநீர் தேவையை அடிப்படையாகக் கொண்டு 2-ம் கட்ட ஆலை ரூ.1,516 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இதனை, 2024-ம் பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், ஆலந்தூர், பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) காரிடார் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.

தொடர்ந்து, 3-ம் கட்ட ஆலைக்கும் 2024-ம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்தசூழலில் தான், இன்று தற்போதைய முதல்வர் விஜய் கடல் நீரை குடிநீராக்கும் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்துள்ளார்.