ஜல்லிக்கட்டு, மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

"மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி" - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

முன்னுரிமை அடிப்படையில், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Prakash J

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அந்த வகையில், நடப்பு பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரத்தில் கடந்த 15ஆம் தேதியும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று காலை முதல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூர் வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

CM Stalin

பின்னர் விழா மேடையில் அமர்ந்தவாறு முதலமைச்சர், போட்டியை கண்டுகளித்தார். அப்போது ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் மோதிரங்களை பரிசாக வழங்கினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி அதிக காளைகளை தழுவிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் உயர்தர ஜல்லிக்கட்டு பயிற்சி, சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.