எம்பி. நவாஸ் கனி pt desk
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று பிரியாணி சாப்பிட்டேனா? - அண்ணாமலைக்கு எம்பி. நவாஸ் கனி சவால்

நான் மலைக்குச் சென்று அசைவ உணவு சாப்பிட்டேன் என்பதை அண்ணாமலை நிரூபித்தால், நான் பதவி விலகிக் கொள்கிறேன் அப்படி நிரூபிக்க வில்லை என்றால் அவர் பதவி விலகிக் கொள்வாரா என ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனி சவால் விடுத்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சு.சுபாஷ்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்...

தர்காவில் ஆடு, கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடை:

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் ஆடு, கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து மதுரை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்தோம். இதையடுத்து தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக மலை மீது சென்றோம். சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு ஆடு, கோழிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை என்று சொன்னார்கள் நாங்கள் காவல் ஆணையரிடம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை அனுமதியுங்கள் என்றோம்.

மலை மீது நான் பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்:

அதற்கு அவர்கள் நாங்கள் சென்று ஆய்வு செய்கிறோம் அது நடைமுறையில் இருந்தால் அதை நாங்கள் அனுமதிக்கிறோம் என்று சொன்னார்கள். நேற்றைய தினம் வருவாய்த் துறையினர் அங்கு சென்று ஆடு சமைக்கும் இடம் போன்றவற்றை ஆய்வு செய்தனர். மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக எம்பி செயல்பட்டுள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை சொல்லியிருந்தார். நான் கேட்கிறேன் கூட்டத்தை கூட்டிக்கொண்டு நான் அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டேன் என்று நிரூபிக்காவிட்டால் அவர் பதவி விலகுவாரா? நான் கூட்டத்தை அழைத்துச் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்து விட்டால் நான் பதவி விலகத் தயார்?

நான் வக்பு வாரியத் தலைவர் என்ற முறையில் மலை மீது ஆய்வ செய்யச் சென்றேன்:

அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தமிழக பாஜக தலைவரின் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும். தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பொய்களை சொல்பவர் அண்ணாமலை. ஐபிஎஸ் படித்துவிட்டு பொய் சொல்லுகிறார். இப்போது லண்டனில் படித்து தேர்ச்சி பெற்று விட்டு எல்லோரும் நம்பும்படியான பொய் சொல்கிறார். அந்த தர்கா வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது. மணப்பாறை எம்எல்ஏ வக்பு வாரிய உறுப்பினர். நான் வக்பு வாரிய தலைவர். அந்த தர்காவிற்கு சொல்லக் கூடியவர்களுக்கு என்ன வசதிகள் குறைபாடுகள் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து அதை அரசிடம் தெரிவிக்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது.

தர்காவிற்கு செல்பவர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்களா என்று இவர்கள் ஏன் கேட்கிறார்கள்:

மத நல்லிணக்கத்திற்காக சுதந்திரத்திற்காக சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு தமிழ்நாட்டில் உள்ளவர் எல்லோருக்கும் தெரியும். பாஜகவின் வரலாறும் தெரியும். பாஜக தலைவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். ஒரு எம்பி அங்கு போய் பிரியாணி சாப்பிடலாமா. முதலில் தர்காவிற்கு செல்பவர்கள் பிரியாணி சாப்பிடுகிறார்களா சைவம் சாப்பிடுகிறார்களா என்று இவர்கள் ஏன் கேட்கிறார்கள். அவர்கள் கோவிலுக்கு போகவில்லை. கோவில் வளாகத்திற்கு செல்லவில்லை காவல்துறை ஆடு, கோழிகளைக் கொண்டு செல்வது தான் தடை. சமைத்த சாப்பாடு கொண்டு செல்வதற்குத் தடை இல்லை என்று சொன்னார்கள்.

ஒற்றுமையை குழைக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்:

அதனால்தான் அவர்கள் சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்தார்கள். நானும் அதை பகிர்ந்தேன். இது காவல்துறை அனுமதித்த செயல். அனுமதியை மீறி யாரும் அங்கு சென்று சாப்பிடவில்லை. இதைப் பற்றி எந்த கட்சியும் பேசவில்லை இவர்கள் மட்டும் தான் பேசுகிறார்கள். அரசியல் செய்வதற்காக பிரிவினை ஏற்படுத்த வேண்டும் ஒற்றுமையை குழைக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். அங்கு நடப்பது மதுரை மக்களுக்கு தெரியும் என்றார்.

மணப்பாறை எம்எல்ஏ எம்பி-யை கைது செய்ய வேண்டும் எச்.ராஜா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்....

”ஒரு எம்எல்ஏ, எம்பியும் ஆய்வு செய்யக் கூடாது என்று சொல்வதற்கு அவர்கள் யார். வக்பு வாரியத்திற்கு சொந்தமாக இருக்கக் கூடிய தர்காவிற்கு ஏதாவது பிரச்னை என்றால் நாங்கள் அதை ஆய்வு செய்து அரசிடம் சொல்ல வேண்டும். பொய்யான தகவல்களை சொல்லுகின்ற சமூகத்தில் பதற்றத்தை உண்டு பண்ணுகின்ற அண்ணாமலை, எச்.ராஜா போன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” என்று ராமநாதபுரம் எமபி நவாஸ் கனி தெரிவித்தார்.