2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அதிமுக-பாஜக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் தாக்கம் குறைவாக இருக்கும் என பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். விஜயை கூட்டணிக்கு அழைக்க தேவையில்லை என்றும், கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்கள் ஏவப்படாத ராக்கெட்டுகளாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியான திமுகவை வீட்டிற்கு அனுப்பும் வியூகம் பெரியளவில் நடந்துவரும் நிலையில், பாஜக தங்களுக்கான தொகுதிகளில் வெல்லும் முயற்சியில் வியூகம் வகுத்து வருகிறது.
அந்தவகையில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தசூழலில் முதலில் விஜய் தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பார்த்த அதிமுக-பாஜக கூட்டணி, அன்புமணி, டிடிவி தினகரன் வருகைக்கு பிறகு விஜயின் தவெகவை விமர்சித்து வருகிறது.
அந்தவகையில் தவெக குறித்தும் விஜய் குறித்தும் பேசியிருக்கும் மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், விஜயை கூட்டணிக்கு அழைக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என, தமிழ்நாட்டிற்கான பாஜக தேர்தல்பொறுப்பாளர் பியூஷ் கோயல்தெரிவித்துள்ளார்.
பிடிஐ உடன் அளித்துள்ள நேர்காணலில் பேசியிருக்கும் அவர், ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதும், அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயம். திமுகவின் வாக்குகளைச் சிறிய அளவில் விஜய் பிரிக்கக்கூடும், அதற்குமேல் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார் என நினைக்கவில்லை. விஜய்யை என்டிஏவுக்கு கொண்டுவரும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை, தனக்கு தெரிந்தவரை அதுபற்றி எந்த பேச்சுவார்த்தையையும் தாங்கள் நடத்தவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், முதல்வராவதற்கு முன்பு எம்ஜிஆர் பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்ததாகவும், ஜெயலலிதா எம்ஜிஆரின் வழிகாட்டுதலில் செயல்பட்டதாகவும் கூறிய பியூஷ் கோயல், கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்கள் ஏவப்படாத ராக்கெட்டுகளாக மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.
மேலும் திமுக குறித்து பேசியிருக்கும் அவர், "தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மிகுந்த எதிர்ப்பு நிலவுகிறது. அது ஒரு திறமையற்ற மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த அரசு, உதயநிதி ஸ்டாலின் முற்றிலும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
தமிழ் கலாச்சாரம் நமக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொடுக்கிறது. அது வெவ்வேறு கண்ணோட்டங்கள். வெவ்வேறு சிந்தனைகள், வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் வெவ்வேறு மதங்களைக் கொண்டாடக் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் தமிழ் கலாச்சாரம் குறித்து உதயநிதி ஒருபோதும் பேசியதில்லை" என்று அவர் கூறினார்.