Baskaran
Baskaran pt desk
தமிழ்நாடு

திருவாரூர்: கந்துவட்டி கொடுமையால் பியூட்டி பார்லர் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு

webteam

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் அருகே ஆண்டாங்கரை பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கரன் - பானுமதி தம்பதியர். இவர்களுக்கு பாக்கியலட்சுமி (22) என்ற மகளும் விஷ்வா (19) என்ற மகனும் உள்ளனர். பாஸ்கர், பெரிய அளவிலான பியூட்டி பார்லர் நடத்தி வரும் நிலையில், தொழிலில் முதலீடு செய்ய வட்டிக்கு பணம் வாங்கி கட்டி வந்துள்ளார். ஆனால், அசல் தொகையை அவரால் அடைக்க முடியவில்லை.

Baskaran family

இந்நிலையில், பணம் கொடுத்தவர்கள், இவர் கட்டிய தொகையை வட்டியில் மட்டுமே வரவு வைத்து வந்துள்ளனர். அவர், வட்டியாக மட்டுமே 18 லட்சம் வரை கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அசல் பணத்தை விரைந்து கட்ட வேண்டுமென பணம் கொடுத்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பாஸ்கர் கடந்த 7 ஆம் தேதி விஷம் அருந்தியுள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பாஸ்கர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி-க்கு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “திருவாரூர் ரயில்வே காலனி கோவிந்தராஜ், அவரது மகன் இனியன் ஆகியோரிடம் நான் வட்டிக்கு கடன் வாங்கி 6 வருடங்கள் ஆகின்றன. அதற்காக 18 லட்சம் வட்டி மட்டுமே கொடுத்துள்ளேன். கந்து வட்டி, மீட்டர் வட்டி என மேலும் ரூ.12 லட்சம் கேட்டு என்னையும், எனது மகனையும் காலி செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

Police station

என்னால் கந்துவட்டி கொடுக்க முடியாத காரணத்தால் எனது உயிரை விடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. இதற்கெல்லாம் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்தான் காரணம். என் மறைவுக்குப்பின் என் குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என எழுதியிருந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி வசூலிப்போரை காவல்துறையினர் விரைந்து கைதுசெய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.