செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 63 வேலம்பாளையம் வாஷிங் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜா. இவரது மனைவி ரேவதி. ரேவதி தனது இரண்டு மகள்களான பிரகன்யா, பிரகாஷினி ஆகியோரும் மற்றும் தீபா, ரிதன்யா, ரித்திகா ஆகியோரும் இன்று அதே பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி பாறைக் குழியில் துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது பிரகன்யா மற்றும் பிரகாஷினி ஆகிய இரண்டு சிறுமிகளும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.
இதைக் கண்ட மற்றவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக உள்ளே குதித்துள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகிய இருவரும் தீபா ரித்திகா மற்றும் ரிதன்யா ஆகியோரை உயிரோடு மீட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் தீயணைப்புத் துறை வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
இதில், உயிரிழந்த தாய் ரேவதியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த குழந்தைகள் இருவரின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..