செய்தியாளர்: சரவணக்குமார்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக முருகனை அவரது குடும்பத்தார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.
பல்லடம் அருகே உள்ள பெரும்பாளி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆம்புலன்சில் பயணித்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற முருகனின் மனைவி கல்யாணி, மகள் கவிதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கவியரசன் மற்றும் விஜய் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நான்கு பேருக்கும் அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், முருகனின் மனைவி கல்யாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த கவியரசன், விஜய் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.