செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.27 கோடி திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்காக கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது எடுக்கப்பட்ட மணல், மலைபோல் ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாலாற்றில் குவித்து வைத்திருந்த மணலை, மணல் கொள்ளையர்களும் ஒப்பந்ததாரர்களும் கூட்டு சேர்ந்து இரவு நேரங்களில் மணலை கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து ஆற்று மணலை திருடுவதாக ஊர் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில், அதன் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து அம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் அளித்த புகாரின் பேரில் நேற்று அம்பலூர் காவல்துறையினர் ஜேசிபி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தும், ஒப்பந்ததாரர் வேலுச்சாமி மீது வழக்குப் பதிவு செய்தும் அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கடந்த 18.02.2025 அன்று கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா இன்று உத்தரவிட்டுள்ளார்.