Accused
Accused pt desk
தமிழ்நாடு

நெல்லை: “இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா?” - அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக பாஜக பிரமுகர் கைது

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு நெல்லை டவுனில் இருந்து மண்ணப்படை வீடு செல்லும் அரசு பேருந்தில் சுப்ரமணியனும், பாலமடையைச் சேர்ந்த நடத்துநர் பாஸ்கரும் பணியில் இருந்துள்ளனர்.

Driver Subramanian

அப்போது திம்மராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் தாமரை சின்னம் பொறித்த போஸ்டரை பேருந்தில் ஒட்டி விட்டு முன்பக்க கண்ணாடியிலும் ஒட்ட முயன்றுள்ளார், இதை பார்த்த நடத்துநர் பாஸ்கர், அரசு பேருந்தில் அரசியல் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று தடுத்துள்ளார்,

அதற்கு மருதுபாண்டி, “இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா?” எனக் கேட்டு அவதூறாக பாஸ்கரை திட்டியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஓட்டுநர் சுப்ரமணியன் மருது பாண்டியை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி, சோடா பாட்டிலால் ஓட்டுநர் சுப்ரமணியன் தலையில் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளார்.

Govt Bus

இதில், காயமடைந்த ஓட்டுநர் சுப்ரமணியன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் மருதுபாண்டி மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மருது பாண்டியை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.