மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்கள், உயர் அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18ஆயிரம் காவல் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன.
அனைத்து இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, சீலிடப்பட்ட பின்னர், அந்தப் பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மையங்களில் தற்போது 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 2,822 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்து, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரியில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு அடுக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தைப் பார்வையிட்ட ஆட்சியர் அருணா, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்து, தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு பலத்த சோதனைகளுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வேலூரில் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் துணை ராணுவப் படையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.