முதல்வர் வேட்பாளர்களின் தொகுதியில் வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு..? வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து, மொத்தமாக 85.15% என்ற வரலாற்றுச் சாதனை சதவிகிதம் பதிவாகியுள்ளது. கரூர் 92.63% என முதலிடத்தில், சேலம், நாமக்கல் 90% மேல் வாக்குகளுடன் பின்தொடர்கின்றன. அதிக வாக்குப்பதிவு ஆட்சிக்கு எதிரான அலைவா, மாற்றத்துக்கான ஆர்வமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. காலை முதலே வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து வாக்குப்பதிவு நிறைவடைந்த பூத்களில் அனைத்து கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் EVM எந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மேலும், நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை விட அதிகமாகும்.
குறிப்பாக நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி கரூரில் அதிகபட்சமான வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்த மாவட்டத்தில் 92.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து சேலத்தில் 90.76% மற்றும் நாமக்கலில் 90.21 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதனிடையில் முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 86.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை இதே தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், இந்த தடவையும் கொளத்தூரில் களமிறங்கியுள்ளார். தன்னுடைய பரப்புரையையும் இதே தொகுதியில் நிறைவு செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளின் படி கொளத்தூரில் ஸ்டாலினுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளாரான எடப்பாடி பழனிசாமி தொகுதியில் 92.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த தடவையும் எடப்பாடியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் பழனிசாமி. எடப்பாடியில் கடந்த முறை பெற்ற வாக்குகளை விடவும், இந்த தடவை அதிகமான வாக்குகளை பெறுவேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தொகுதியில் தவெக வேட்பாளரை போட்டியிட விடாமல் சதி செய்து விட்டதாக சர்ச்சைகள் எழுந்தது.
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு 74.33% வாக்குகள் பதிவாகியுள்ளன. சீமான் போட்டியிடுவதால் காரைக்குடி நட்சத்திர தொகுதியாக இந்த சட்டமன்ற தேர்தலில் கவனம் ஈர்த்தது. ஆனால் இங்கு மற்ற முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை காட்டிலும் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளரான விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் 89.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பணிமனை அமைத்து தவெகவினர் தங்கள் தலைவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விஜய்யும் சில வீடுகளில் நேரில் சென்று வாக்கு கேட்டார்.
அதே போல் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 81.77% வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி கிழக்கில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். இதனிடையில் கே.என்.நேரு திருச்சியில் உள்ள அனைத்து தொகுதிகளை திமுக கைப்பற்றும். உதயசூரியன் தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

