தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தமிழக வெற்றிக் கழகம், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், தவெகவின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். முதலில் வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்த கட்சிகள் விசிக மற்றும் ஐயூஎம்எல் தற்போது அமைச்சரவையில் பங்கேற்றிருப்பதுடன் தவெகவுடன் கூட்டணியிலும் இணைந்து விட்டன. காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயூஎம்எல் அடங்கிய இந்தக் கூட்டணிக்கு விரைவில் பெயர் வைக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 உட்பட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் அதிமுக நிர்வாகிகள் என பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். மேலும், சில அதிமுக உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் தான், ஆதரவளித்த கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாததன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏ-க்களை குதிரை பேரம் மூலம் வாங்குவதாக எதிர்க்கட்சிகல் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக விசிக தலைவர் திருமாவளனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசுகையில், அதிமுகவை முழுவதுமாக தவெகவில் இணைப்போம் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறதென்றால் அவர்களிடம் இது சரியா? ஜனநாயகமா? அரசியல் அறமா? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும்; ஆனால், எங்களிடம் இதுதொடர்பான கேள்விகளைக் கேட்பது பொருத்தமில்லாதது.
குதிரை பேரம் உண்மையாக இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருந்தால் அவர் உடனடியாக தலையிட வேண்டும். அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து அதிமுக தலைவர்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்; தவெகவிற்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன?” எனத் தெரிவித்திருக்கிறார்.