தேனி மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்தவர் சத்யா நந்தகுமார். தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி உறுப்பினராக உள்ளார். இவர் தவெகவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது பங்கேற்று, மகளிர் குழுக்களை ஒன்றிணைத்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில்தான், தன் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கிறது என்று தவறான தகவல்களை தவெக தலைமைக்கு தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தவெக செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னை கட்சிப் பணி செய்யவிடாமலும், தனக்கு அங்கீகாரம் கிடைக்க விடாமலும் முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படும் இந்த சூழலில், தற்போது அந்த கட்சிக்குள் பெண் உறுப்பினரை ஓரங்கட்ட மாவட்டச் செயலாளர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏழு நிமிடங்களுக்கும் மேல் நீண்டிருக்கும் அந்த வீடியோவில், “விஜய் மக்கள் இயக்கத்தில் ஆரம்பித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் வரை என கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வருகிறேன்.
ஆனால், தற்போது தவெக தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என் மீது தவறான தகவல்களை தலைமைக்கு தெரிவித்து தன்னுடைய மக்கள் பணியை முடக்கியுள்ளனர்.
குறிப்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது எனக் காரணம் காட்டி தனக்குரிய அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்கின்றனர்.
ஆனால் தன் மீது எந்தவித வழக்குகளும் நிலுவையில் இல்லை என காவல்துறையிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளேன்” அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “பெண்களுக்கு அரணாகவும், அண்ணனாகவும் இருப்பேன் என்று கூறிய தவெக தலைவர் விஜய்க்கு இந்த விஷயம் சென்றடைய வேண்டும். நான் மீண்டும் மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி என்ற பாண்டியிடம் கேட்ட போது, “தேனி மாவட்டத்தில் இதுவரை மேலிடத்திலிருந்து தவெக மகளிர் அணிக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. மகளிர் அணி உறுப்பினர் சத்யா கூறுவது முழுக்க முழுக்க பொய். அவருக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் யாரும் கருத்து கூறவில்லை. யாருடைய தூண்டுதலினாலோ சத்யா இதுபோன்று பொய் புகார் தெரிவித்து வருகிறார்" என்றார்.
இது குறித்து தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பினை எடுக்கவில்லை. தவெக கட்சி ஆரம்பித்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இத்தகைய சூழலில் மாவட்டச் செயலாளர்களால் மகளிர் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:
தவெக மாவட்டச் செயலாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த சத்யா நந்தகுமாரிடம், இது குறித்து நாம் தனிப் பேட்டி கேட்டதற்கு தர மறுத்து விட்டார். வலைத்தளத்தில் உள்ள வீடியோவை பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொண்டார்.