செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பகுதியில் மணியரசன் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கம்போல காலையில் இருந்தே இறைச்சி வாங்க வாடிக்கையாளர் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், மணியரசனிடம் தனக்கு இலவசமாக இறைச்சி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு மணியரசன் கறி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அங்கு வந்த குமார், மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பாக போட்டுச் சென்றுள்ளார். இதனால் இறைச்சி வாங்க வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார், அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சடலத்தை கறிக்கடை முன்பு போட்டுச் சென்ற குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமார், சற்று மனநிலை சரியில்லாதவர் என்பது முதற்கட்ட விசாரணைக்குப் பின் போலீசார் தெரிவித்துள்ளனர்.