funeral
funeral file image
தமிழ்நாடு

இறப்புக்கு பின்னும் தொடரும் துயரம்.. உயிரை பணயம் வைத்த உறவினர்கள்! கழுத்தளவு நீரில் இறுதி ஊர்வலம்..

யுவபுருஷ்

தேனி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம்தான் நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்ககோணம்பட்டி. 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு, ஊரின் ஒதுக்குப்புறத்தில் மூல வைகையாற்றின் மறுக்கரையில் பொது மயானம் இருக்கிறது. ஆற்றின் இக்கரை முழுவதும் பாறைகளாக இருப்பதால், குழி தோண்ட முடியாத நிலை கருதி ஆற்றின் அக்கரையில் உள்ள இடத்தை கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் மூலவைகையில் தண்ணீர் வருவதால், உயிரிழந்தவரின் உடலை ஆற்றைக் கடந்து சென்று அக்கரையில் மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதில் சோகம் என்னவெனில், டியூப்களில் காற்றடித்து அவற்றை இணைத்து கட்டி உயிரழந்தவர்களின் உடலை அதில் வைக்கின்றனர்.

மேலும், கழுத்தளவு நீரில் தங்களின் உயிரைப் பணையம் வைத்தவாறு ஆபத்துடன் சடலத்தை சுமந்து செல்ன்று அடக்கம் செய்துவருகின்றனர் உறவினர்கள்.

இதுதொடர்பாக புதியதலைமுறையில் ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், ஆய்வு செய்த ஆட்சியர் புதிய பாலம் கட்டித் தருவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால், வருவாய்துறை நடத்திய ஆய்வில், அந்த பகுதியில் பாலம் கட்ட வசதியில்லை என்பதும், அந்த கிராம மக்கள் மயானம் அருகில் உள்ள தடுப்பணை ஓரம் சுற்றி வந்து ஆபத்தின்றி, இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யவும் கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.