தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன், இபிஎஸ்
தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன், இபிஎஸ் pt web
தமிழ்நாடு

டிடிவி வசம் செல்கிறதா? டஃப் கொடுக்கும் தங்கத்தமிழ்செல்வன்.. ‘இலை’ நிலை என்ன? - கொதிக்கும் தேனி களம்

Angeshwar G

தேனி மக்களவைத் தொகுதி

நெருங்கிவிட்டது நாடாளுமன்ற பொதுத்தேர்தல். அரசியல் கட்சிகளின் கட்சிகளின் பரபரப்புகளுக்கு இடையே மக்களும் பரபரப்பாகிவிட்டனர். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கட்சிகளின் வரிசையை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இடைவிடாத பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் என படபடக்கிறது தமிழ்நாடு.

தேனி மக்களவைத் தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுகவின் இரு முதல்வர்களும் தேனியில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார்.

எம்.ஜி.ராமச்சந்திரன்

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தேனி மக்களவைத் தொகுதி. பெரியகுளம் (தனி), போடி நாயக்கனூர், ஆண்டிபட்டி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தேனி மக்களவைத் தொகுதி. சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய இரண்டு பேரவைத் தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் உள்ளன. பிற நான்கு பேரவைத் தொகுதிகளும் தேனி மாவட்டத்தில் உள்ளன.

ஆதிக்கம் செலுத்தும் ‘இரட்டை இலை’

தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 முறை அதிமுகவும், ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. பெரியகுளம் தொகுதியாக இருந்த போது தற்போதைய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சேடப்பட்டி முத்தையா இருமுறை வென்றுள்ளார்.

டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆர் காலம் தொட்டே தேனி மாவட்டத்தில் அதிமுக பலமாக இருந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் தோற்றது. அதிலும் சாதாரண வெற்றி அல்ல. கிட்டத்தட்ட 5 லட்சம் வாக்குகள் என 43% வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றி பெற்றிருந்தார். இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் இவிகேஎஸ் இளங்கோவன் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவைத் தொடங்கிய டிடிவி தினகரன், தங்கத் தமிழ்செல்வனை தேனி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக களமிறங்கினார். அவரும் 1 லட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் என்று கணிசமான வாக்குகளப் பெற்றார். அதிமுகவின் வாக்குகள் பெரும்பாலும் பிரிந்த போதும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றது அதிமுகவின் பலத்தைக் காட்டியது.

டிடிவிக்கு சாதகமா?

ஆனால், தற்போது அதிமுக மேலும் ஒரு பிரிவாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ்- க்கு தேனி தொகுதியில் இருக்கும் செல்வாக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரும், அவரது மகன் ரவீந்திரநாத்தும் தற்போதைய தேர்தலில் டிடிவி தினகரனை ஆதரிப்பது பாஜக கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனும் அப்பகுதியின் முன்னாள் எம்பி என்பதால், அத்தொகுதி மக்களுக்கும் டிடிவி தினகரன் மிகப்பரிட்சயம். அதிமுக தேனி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக வி.டி. நாராயணசாமியை அறிவித்துள்ளது. திமுக தனது வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனை நிறுத்தியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன்

கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட போடிநாயக்கனூரில் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் நின்று தோல்வியுற்றிருந்தார். இந்த தேர்தலிலாவது வெற்றிபெற்று பதவி பெறும் ஆசையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயத்தில் தங்க தமிழ்ச்செல்வனிற்கு எதிரான கோஷ்டியும் திமுகவில் இருப்பதாக கூறப்படுகிறது. தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான ராமகிருஷ்ணனுக்கும், வடக்கு மாவட்ட செயலாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

மக்களுக்கு பரிட்சயமான தங்கதமிழ்ச்செல்வன் 

இத்தகைய சூழலில் தேனி களம் என்பது யாருக்கு சாதகமாக அமையும் என விசாரித்தோம். “அமமுகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிதான் தேனி. உசிலம்பட்டியின் தற்போதைய எம்.எல்.ஏ தற்போது ஓபிஎஸ் அணியில்தான் இருக்கிறார். போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் தான் வெற்றி பெற்றுள்ளார். ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சோழவந்தான் போன்ற பகுதிகளில்கூட அதிமுக ஆதரவாளர்கள் தான் அதிகம். அதிமுக சார்பில் நிற்கும் நாரயணசாமி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே தினகரனுக்கு இம்மாதிரியான நிலைகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

இதில், தினகரனுக்கு இருக்கும் சிக்கல் என்னவெனில், தேனி மக்களில் பெரும்பான்மையானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அதிமுக என்ற கட்சியின் பெயர், யார் பொதுச்செயலாளராக இருக்கிறார்கள் என்பதெல்லாம் பொருட்டில்லை. எனவே தினகரன் தனது சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது சவாலான பணி.

வி.டி.நாராயணசாமி

திமுக காங்கிரஸ் கூட்டணியைப் பொருத்தவரை தங்கத் தமிழ்ச்செல்வன் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். தொகுதியில் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை என்று கூட சொல்லலாம். அதேநேரத்தில், திமுக, காங்கிரஸ், விசிக கூட்டணி தங்க தமிழ்ச்செல்வனுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். காங்கிரஸ் வாக்காளர்கள் அங்கு அதிகளவில் உள்ளார்கள். இல்லையெனில், இவிகேஎஸ் இளங்கோவன் ஏன் கடந்த தேர்தலில் போட்டியிடப் போகிறார். இம்மாதிரியான சூழல்கள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக இருக்கும். எனவே முதல் இரு இடங்கள் திமுக, டிடிவி போட்டியாகத்தான் இருக்கும். அதிமுகவிற்கு அத்தொகுதி சிக்கல்தான்” என்றனர்.

”தேனியில் வெல்லாவிட்டால் பதவி ராஜினாமா” அமைச்சர் மூர்த்தி

மூர்த்தி மற்றும் தங்கதமிழ்செல்வன்

இதற்கிடையே, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், ”தேனி நாடாளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றிபெற செய்யாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் ராஜினமா செய்வேன்” என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.