சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு pt desk
தமிழ்நாடு

தேனி: சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்குமார்

தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் பருவமழை தீவிரமடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இதனால் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர், “அருவிப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். உரிய தகவல் வந்தபின் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரலாம். இப்போது யாரும் வந்து ஏமாற்றமடைய வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.