இளைஞர்கள் மீது தாக்குதல்
இளைஞர்கள் மீது தாக்குதல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

குடும்பத்தோடு தியேட்டருக்கு போன இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. சிதம்பரத்தில் பரபரப்பு

யுவபுருஷ்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள வடுகநாதன் திரையரங்கில், சிரஞ்சீவி என்ற இளைஞர் நேற்று இரவு தனது சகோதரர்கள் இருவர் மற்றும் குடும்பத்தினருடன் ஜிகர்தண்டா திரைப்படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் திரையரங்கம் உள்ளே சென்ற நிலையில் கடைசியாக இளைஞர் சிரஞ்சீவி உள்ளே சென்றுள்ளார்.

அப்பொழுது அவரை தடுத்து நிறுத்திய திரையரங்க ஊழியர்கள், மது அருந்தி இருக்கிறாரா என பரிசோதனை செய்துள்ளனர். அந்த நேரத்தில், சிரஞ்சீவி தனக்கு எந்த தீய பழக்கங்களும் கிடையாது என்றும், குடும்பத்துடன் படம் பார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்து திரையரங்க ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக சோதனை செய்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த சிரஞ்சீவியின் சகோதரர்களும் தங்கள் சகோதரனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என வாதிட்டுள்ளனர். இதனையடுத்து திரையரங்க ஊழியர்கள் எட்டு பேர் ஒன்றிணைந்து, இளைஞர் சிரஞ்சீவி மற்றும் அவரது சகோதர் இருவரையும் கொடூரமாக தாக்கியதுடன், அங்கே இருந்த கட்டையால் அவரது மண்டையை அடித்து உடைத்தனர்.

படுகாயம் அடைந்த சிரஞ்சீவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து ரத்தம் சொட்ட சொட்ட, தன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்றும், திரையரங்க ஊழியர்கள் தன்னையும் தனது சகோதரர்களையும் கொடூரமாக தாக்கியது குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாரிடம் கேட்டபோது, திரையரங்க ஊழியர்கள் 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களை திரையரங்க ஊழியர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் சிதம்பரம் நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.