புதிய தலைமைச் செயலகம் தோன்றி மறையும் இந்த வரலாற்றில், 2010ல் கருணாநிதி திறந்த ஓமந்தூரார் தோட்டக் கட்டிடம், 2011ல் ஜெயலலிதா ஆட்சியில் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டு, பன்னோக்கு மருத்துவமனையாக மாறியது. 2021 திமுக ஆட்சியிலும் மாற்றமின்றி இருந்த நிலையில், தற்போது தவெக அரசு 1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடியில் நவீன ஒருங்கிணைந்த வளாகம் அமைப்ப خطை அறிவித்துள்ளது.
சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை 1639-40 ஆம் ஆண்டுகளில் கிழக்கு இந்தியக் கம்பெனியால் கட்டப்பட்டதில் இருந்து அந்த கட்டடமே ஆங்கிலேயரின் முக்கிய நிர்வாக அலுவலகமாக இயங்கியது. தொடர்ந்து இந்தியா பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னர், மதராஸ் மாகாணத்தின் தலைமை அலுவலகமாக புனித ஜார்ஜ் கோட்டை இயங்கி வந்தது.
இதனிடையே முதல் முறையாக 1921-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை புனித ஜார்ஜ் கோட்டையில் கூடியது. அப்போதில் இருந்து தற்போது வரை விதிவிலக்கான சில தருணங்களை தவிர சட்டமன்றம் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்பட்டு வருகிறது. அதே நேரம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ராணுவத்துக்கு சொந்தமான இந்த புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு தலைமைச் செயலகம், சட்டப் பேரவை மற்றும் சில அரசுத் துறைகள் இயங்கும் மையக் கட்டிடப் பகுதிகள் மட்டுமே தமிழக அரசால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காகத் தமிழ்நாடு அரசு ராணுவ அமைச்சகத்திற்கு குத்தகை தொகையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இதன் காரணமாகவும், இடநெருக்கடி காரணமாகவும் தமிழ்நாட்டுக்கு என சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமை செயலக கட்டடத்தை அமைக்கும் திட்டங்கள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2001-2006 காலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில், சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாணவர்கள் மற்றும் பிற எதிர்ப்புகள் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்யப்பட்டது. ஆனால் அடுத்து வந்த திமுக ஆட்சிக்காலத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டு, அந்த இடம் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே வழங்கப்பட்டது.
தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரம்மாண்டமாகப் புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிடப்பட்டு, அந்த கட்டடம் 2010 மார்ச் மாதத்தில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.
எனினும் 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதோடு ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
பின்னர் 2021-இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தலைமைச் செயலகம் ஓமந்தூரார் தோட்டத்திற்கே மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்த சூழலில் தற்போது தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.