கொத்தடிமைகளாக இருந்த குடும்பத்தை மீட்ட அதிகாரிகள்
கொத்தடிமைகளாக இருந்த குடும்பத்தை மீட்ட அதிகாரிகள்  file image
தமிழ்நாடு

"கொத்தடிமையாக" வேலை செய்த தம்பதி; செங்கல் சூளைக்குள் அதிரடியாகப் புகுந்த அதிகாரிகள் - என்ன நடந்தது?

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளை ஒன்று செய்யப்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகச் சிலர் பணியாற்றி வருவதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து பைரப்பள்ளிக்கு விரைந்து சென்ற அரசு அதிகாரிகள், அங்கு நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள குப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா, மற்றும் இவர்களது குழந்தைகள் கார்த்திகேயன், தருண் ஆகிய 4 பேரும் கடந்த 2 ஆண்டுகளாகச் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து நான்கு பேரையும் மீட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அவர்களை ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு துவங்கி அந்த வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துச் சென்றனர்.

செங்கல் சூளையில் 2 வருடங்களாகக் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.