தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த அறிவிப்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் போக்குவரத்து துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நீதித்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 46,766 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 44,527 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல 2025-26 நிதியாண்டில் உயர்கல்வித்துறைக்கு 8,494 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 8,393 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர கடந்த மார்ச் மாதம் திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 1 ரூபாய் வரவில் 33 % பொதுகடனாக பெற திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 1 ரூபாய் வரவில் 33.1 % பொதுக்கடனாக பெற திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 1 ரூபாய் செலவில் 10% தொகையை கடனை திரும்ப செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 1 ரூபாய் செலவில் 9.9% தொகையையே கடனை திரும்ப செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு வாங்கும் கடன் விகிதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.