தந்தை கைது pt desk
தமிழ்நாடு

தென்காசி | இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுமி - தந்தை கைது

இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் சிவகிரி சேனைத்தலைவர் மண்டபம் அருகே பெண் ஒருவர் அவரது 9 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் சாலையோரம் நடந்து சென்ற சிறுமியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது சிவகிரியைச் சேர்ந்த 15 வயது சிறுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து 15 வயது சிறுமிக்கு இருசக்கர வாகனத்தை கொடுத்த ஓட்ட அனுமதித்த சிறுமியின் தந்தை குருசாமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெற்றோர்கள் சாலை விதிகளில் அலட்சியம் காட்டினால் அது உங்கள் குழந்தைக்கு பெரும் ஆபத்தில் முடியலாம் இது போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது மீறும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர் சிறுமிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.