ஐநா சபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர்நரேந்திர மோடி, யோகவிற்கு என சர்வதேச தினம் வேண்டும் எனக் கோரினார். இதைத் தொடர்ந்து, 177 நாடுகள் ஆதரவுகள் ஆதரவளித்தன. இதையடுத்து, டிசம்பர் 11, 2014 ஆண்டு ஜூன் 21ம் தேதியை ஐநா பொதுச்சபை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தான், சர்வதேச யோகா தினமான இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உலக யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதற்கு நாம் அனைவருமே பிரதமருக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் யோகா உடலுக்கு மனதுக்கும் மிகுந்த அமைதியையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. உலக அளவில் இஸ்லாமிய நாடுகள் கூட இன்று யோகா தினத்தை கொண்டாடி வருகிறது.
ஆகையால், அனைவருமே யோகா செய்ய வேண்டும். எப்படி பிரதமர் பிரம்மாண்டமான விழாவில் கலந்து கொள்கிறாரோ.. அதேபோல இளைஞராக உள்ள தமிழ்நாடு முதல்வரும் பிரம்மாண்டமான நிகழ்வில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கையாக வைக்கிறேன்.
அரசியல்வாதிகளுக்கு யோகா மிக முக்கியமாக தேவை. ஏனென்றால் பல ஏற்றத்தாழ்வுகளை, கோப தாபங்களை, போட்டிகளை சந்திக்கும் பொழுது அவர்களுக்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது” எனத் தெரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்துவார் என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறை பாலியல் குற்றங்கள் நடைபெறும் போது அதனை தடுக்க வேண்டும் என மிகுந்த ஆதங்கத்தோடு நாம் சொல்லி வருகிறோம். இதில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது பெண்கள் பாதுகாப்பு அதில் மிக மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆளுநர் உரை மிக அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆரோக்கியமாக சென்றுள்ளது. முந்தைய ஆட்சியில் ஆளுநர் உரையின்போது குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆளுநர் தனது உரையில் இந்த அரசு குறித்து நல்ல எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறார், அரசும் அந்த வழியில் நல்ல எண்ண ஓட்டத்தை பிரதிபலித்து நல்ல ஆட்சி நடத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேகதாது நம் அனைவரின் உரிமை. காங்கிரஸில் இங்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்களா? இல்லையென்றால் மேகதாதுவில் நம்மால் அணையை தடுக்க முடியவில்லை என்றால் இவர்களின் நிலை என்ன? காங்கிரஸின் இரட்டை வேடம் இதில் தெரிந்து கொண்டிருக்கிறது என்பதை தான் நாமும் தெரிந்து கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.