தமிழக வெற்றிக் கழகம்  Pt web
தமிழ்நாடு

தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா.. பனையூர் அலுவலகத்தில் விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இவ்விழாவில், தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.

Premkumar S

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயராகி வருகின்றனர். தவெக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்குகொடுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும் கூட, தவெக உடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை. இந்த நிலையில் தான், 2024 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடித்து வைக்கிறது. இதையொட்டி, இன்று காலை 11 மணிக்கு பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நடக்கிறது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து, அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.

தவெக தலைவர் விஜய்

முன்னதாக, தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், ”நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.