2026-2027 நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக எம்.பி கனிமொழி சோமு குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டை பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியில் புறக்கணித்ததாக அவர் கூறியுள்ளார். திருக்குறளை மேற்கோள் காட்டி, மக்களின் குரல் புறக்கணிக்கப்பட்டது எனவும், நிதிநிலை அறிக்கை தோல்விகரமானது எனவும் அவர் விமர்சித்தார்.
2026-2027 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், இந்த மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் எனவும், அதிகளவில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மாநிலங்களுக்கு எதிர்பார்த்த அளவில் நிதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் புறக்கணித்து இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். தொடர்ந்து, இன்று மாநிலங்களவையில் நடைபெற்று வரும் விவாதத்திலும் இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதன்படி, திமுக எம்.பி கனிமொழி சோமு, தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசுகையில் "இந்த நிதிநிலை அறிக்கையே ஒரு தோல்விகரமான நிதிநிலை அறிக்கை. ஆனாலும், அவரது தொடர் முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தோல்விகரமான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது என்பதே ஒரு சாதனைதானே! இவர்களது இந்த சாதனை மக்களுக்கோ, இந்திய பெருநாட்டிற்கோ நன்மை அளிக்கவில்லை. அவர்களது கட்சிக்காரர்களுக்கும், குறிப்பிட்ட சில பல பெரு முதலாளிகளுக்குமே நன்மையளித்து வருகிறது" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “சில ஆண்டுகளாக நமது நிதியமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கைகளில் குறைந்தபட்சம் நம் தமிழ்மொழியின் பெருமைமிகு அடையாளமான திருக்குறளையாவது குறிப்பிட்டு பேசிவந்தார் என்று தமிழ் மக்கள் ஆறுதல்பட்டார்கள். ஆனால்,, இந்த ஆண்டு அந்தப் பெயரளவுக்கான அங்கீகாரம் கூட வழங்கப்படாமல் பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தமிழ்மக்களின் குரல் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது” எனப் பேசினார்.
“வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலன்று கொடாது எனின்”
என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி பேசிய அவர், ”அதிகாரம் போர்க்களங்களை வென்று காட்டலாம், ஆனால் மக்கள் மன்றத்தில் உறுதிசெய்யப்படும் சரியான நீதிதான் மக்களின் மனங்களையும் நாட்டின் நிலைத்தன்மையையும் வென்று காட்டும்” என அவர் குரலின் பொருளை எடுத்துரைத்து வலியுறுத்தியிருக்கிறார்.