செய்தியாளர் இ.சகாய பிரதீபா
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக்கோரியும், திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரியும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும் கோரிக்கைகளை முன்வைத்து பலரும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவற்றை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் வழக்கு 3வது நீதிபதியின் முன்பாக பட்டியலிடப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், "சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆடு கோழி பலியிட்டு, கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா? நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
மனுதாரர்கள் தரப்பில், “ஆடு, கோழி பலியிடுவதால் மலையின் புனிதம் கெட்டு தீட்டுப்படும்” என வாதிடப்பட்டது. அதற்கு அரசு தரப்பில், “தீட்டு என்பதே மனித குலத்திற்கு எதிரானது. தீட்டு என்பது சாதியிலோ, மதத்திலோ, மனிதர்களுக்குள்ளோ இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. மிகவும் பிரபலமான அழகர் கோவிலில் பதினெட்டாம்படி கருப்பிற்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாளையே தரிசிக்க செல்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது எப்படி இது தீட்டாகும்? எனவே தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கான வருவாய்துறை ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், “நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு கோழி பலியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு” என வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, மத்திய தொல்லியல் துறை தரப்பில் தனது வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.