Papanasam Dam  X
தமிழ்நாடு

தமிழகத்தின் 90 அணைகளில் நீர்மட்டம் சரிவு.. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு? சென்னை நிலவரம் என்ன?

தமிழக நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மிக வேகமாக குறைந்து வருகிறது. கோடை வெயில் தீவிரமடைவதற்கு முன்னரே, நீர் இருப்பு குறைந்துள்ளது. மொத்தமுள்ள 224 டிஎம்சியில் தற்போது 100 டிஎம்சி மட்டுமே உள்ளது.

PT WEB

தமிழகத்தில் 90 அணைகளில் நீர்மட்டம் குறைவதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளில் 76% நீர் இருப்பதால், அடுத்த சில மாதங்களுக்குத் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது. காவிரி படுகை மாவட்டங்களில் பாசனக் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, கோடை வெயில் தீவிரமடைவதற்கு முன்னரே மிக வேகமாக குறைந்து வருவதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. மொத்த நீர் இருப்பு 224 டி.எம்.சியாக உள்ள நிலையில், தற்போது 100 டி.எம்.சி மட்டுமே நீர் உள்ளது. மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 76,297 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில், தற்போது வெறும் 45,545 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது.

Mettur Dam

வரும் வாரங்களில் வெயிலின் தாக்கத்தால் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோடைமழை பெய்தால் நிலைமை சீராகும் என நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மாநிலத்தின் பல்வேறு அணைகளில் நீர் இருப்பு குறைந்தாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 முக்கிய ஏரிகளில் 76 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இது, அடுத்த சில மாதங்களுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், காவிரி படுகை மாவட்டங்களில் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.