எம்.பி-க்கள் கூட்டம் X
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை | தமிழக அரசின் எம்.பி-க்கள் கூட்டம் நிறைவு - தலைவர்கள் பேசியது என்ன?

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்.பி-க்கள் கூட்டம் நிறைவடைந்திருக்கிறது.

Premkumar S

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்த மசோதாவின் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கும் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இதில், திமுக முக்கியப் பங்கு வகித்திருந்தது.

இந்தசூழலில் தான், தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  அதே மசோதாவை கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாகியிருக்கிறது.

இந்தநிலையில் தான், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார். ஆனால், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் மநீம உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-க்கள் பங்கேற்கவில்லை. அதேசமயம், விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 19 மாநிலங்களவை மற்றும் மக்களவை எம்.பி-க்கள் பங்கேற்றிருந்தனர். இன்று பிற்பகல் தொடங்கிய கூட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது.

எம்.பி-க்கள் கூட்டம்

இந்தக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளமாட்டோம் எனவும் தொகுதி மறுவரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவருவோம் எனவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

தொடர்ந்து, இந்தக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டின் உரிமை பறிபோகக் கூடாது. இதில் அரசியல் செய்வோரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், தொகுதி மறுவரையறை என்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் சதி. பாஜக ஆஃபர் கொடுக்கிறது என ஏமாந்து விடக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறார்.

எம்.பி. சு. வெங்கடேசன் பேசுகையில், ”தொகுதி மறுவரையறை என்பது ஏமாற்று வேலை. அமித் ஷா-வின் ஆசை வார்த்தை சட்டவடிவம் பெறுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.