ஆளுநர் ஆர்.என்.ரவி - உச்சநீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு.. விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்

துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்குகளையும், ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளையும் இறுதி விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

PT WEB

செய்தியாளர் ராஜீவ்

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு தொடர்பாக புதிய கூடுதல் மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

உச்சநீதிமன்றம்

முன்னதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜராகி, தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்குகளை ஒரு வாரத்துக்கு பின்னர் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் கூடுதல் முன்னேற்றங்கள் உள்ளன எனவும் நீதிபதி ஜெ.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மகாதேவன் அமர்வில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஆளுநர் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதா? அல்லது பழைய நிலையே தொடருகிறதா?" என வினவினர். அதற்கு தமிழ்நாடு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் அபிஷேக் சிங்வி, "ஆளுநர் மற்றும் அரசு இடையேயான மோதல் போக்கு என்பது பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து கொண்டு வருகின்றன. இதுவரை முடிவுக்கு வரவில்லை" எனத் தெரிவித்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின்

மேலும், "இந்த விவகாரத்தில் தற்போது துணைவேந்தர்கள் நியமன பிரச்சனையும் வந்துள்ளது. மேலும், துணைவேந்தர் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவையும் முந்தைய வழக்குகளோடு இணைத்து விசாரணைக்கு ஏற்க வேண்டும்" என தெரிவித்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் கூடுதல் மனுவை ஏற்பதாக தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.