CM Vijay x page
தமிழ்நாடு

’கோவை சிறுமிக்கு நடந்தது மன்னிக்க முடியாத குற்றம்..’ - முதலமைச்சர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். விரைவான விசாரணை நடத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.

PT WEB

கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்தைக் கண்டித்த முதலமைச்சர் விஜய், விரைவான விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்வதாக அறிவித்துள்ளார்.

கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்த 10 வயது சிறுமி, கடந்த 21ஆம் தேதி முதல் காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கார்த்தி மற்றும் மோகன்ராஜ் என்ற இருவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் CMO Tamil Nadu X தளத்தில் பதிவிட்ட பதிவில், கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

கோவை 10 வயது சிறுமி கொலை

தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.