கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையன் 50 ஆண்டுகளாக அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்த 2021-இல் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அரை நூற்றாண்டு பொது வாழ்க்கையில் பிரிக்க முடியாத தொகுதி, ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையம். 1977இல் சத்தியமங்கலத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், கோபிசெட்டிபாளையத்தில் 8 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். 2016ஆம் ஆண்டு சுமார் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற செங்கோட்டையன், 2021இல் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. தற்போது அக்கட்சியின் தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளராக இருந்தபடி, கொங்கு மண்டலத்திலும் கவனம் செலுத்திவருகிறார் செங்கோட்டையன். விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில், சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், இந்த தொகுதியில் தமிழக அரசுப் பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' மற்றும் நவீனக் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார் செங்கோட்டையன். விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் இன்னமும் கோரிக்கைகளாகவே உள்ளன. தற்போது விஜய்யின் தமிழக வெற்றி கழக கொடியின் கீழ் அவர் களம் காண்பதால், கோபிசெட்டிபாளையம் தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது.