தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவிவருகிறது. தொடர்ந்து, 2வது முறையாக மீண்டு ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுக கூட்டணி தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுக கூட்டணியின் சார்பில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று தீவிர பரப்புரை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு கோரினார்.
பின்னர் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், அன்பு, பண்பு, விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது மதுரை. தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக திகழும் இந்த மண்ணுக்கு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று கூறினார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்கள் முன்னேறி வருவதாகவும், அங்கு பயின்ற 24 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோருக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சமூக முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆரிய மாடல் மூலம் சமூக ஒற்றுமையை பாதிக்க முயல்கிறது என்றும் மதுரையை மணிப்பூரைப் போல மாற்ற முயற்சி நடக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். ஆனால், மதுரை மக்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புவோர் என்பதால், அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் கூறினார்.
2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் நடைமுறைக்கு வராததை சுட்டிக்காட்டிய அவர், இதே காலத்தில் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக கூறி, தமிழ்நாட்டின் மீது பாஜகவுக்கு வெறுப்பு உள்ளது என்றார். மேலும், கீழடி ஆய்வுகள் உள்ளிட்ட தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவிக்காததையும் அவர் விமர்சித்தார். இறுதியாக, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற கேள்வியை முன்வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.