நாமல் ராஜபக்சே, முதல்வர் ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கோரிக்கை.. முதல்வரைப் பாராட்டிய நாமல் ராஜபக்சே!

தமிழகத்தில் வசிக்கும் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே வரவேற்றுள்ளார்.

Premkumar S

1983 முதல் இலங்கையில் ஏற்பட்ட இனப்போர் காரணமாக தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழகத்தில் அகதிகளாக குடியேறினர். இதையடுத்து, அவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு, கல்வி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது. தற்போதைய சூழலில், தமிழகத்தில் 89,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் எவ்வித குடியுரிமையும் இல்லாமல், மறுவாழ்வு மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் வசித்து வருகின்றனர்.

இலங்கை மறுவாழ்வு மையம்

இத்தகைய சூழலில், கடந்த 15ஆம் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், இலங்கைத் தமிழர்களில் 40% சதவீதம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் எனவும் அவர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற சட்டப்பூர்வ தீர்வுகள் கிடைகாமல் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கடிதத்திற்கு இலங்கைத் தமிழர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில்தான், தமிழகத்தில் வசிக்கும் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’தமிழக முகாம்களில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்த கோரிக்கை வரவேற்கத்தக்கது. இது அங்குள்ள மக்களின் சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்விற்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சே

அதேவேளையில், கடந்த காலங்களில் தேர்தல் நேரங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய கோரிக்கை வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இருக்காமல், உண்மையான மனிதாபிமான அடிப்படையில் இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்திய அரசு, இலங்கை அரசு மற்றும் தமிழக அரசு ஆகிய மூன்றும் இந்த உணர்ச்சிகரமான மனிதாபிமானப் பிரச்னையை அரசியலாக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிரந்தரத் தீர்வை எட்ட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.