தொழில்நுட்ப நிறுவனமான சோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் நிலவும் ஊழல் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ளது போன்றதொரு சட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், ”தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சிங்கப்பூரைப் போன்ற கடுமையான சட்டங்களை போதைப்பொருள் விற்பனை மற்றும் உயர்மட்ட ஊழலுக்கு எதிராக அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளில் உள்ள உயர் அதிகாரிகளின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடைபெறும் உயர்மட்ட ஊழலுக்கு கடுமையான தண்டனை, அதில் மரண தண்டனையும் இடம்பெற வேண்டும் .
அதேவேளையில், கடந்த கால ஊழல் விவகாரங்களுக்கு ஒரு முறை மன்னிப்பு வழங்கி, எதிர்கால ஊழலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்” என கூறியுள்ளார்.
மேலும், உரிய விசாரணை மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் அவசியம் என்றாலும், வழக்குகள் பல ஆண்டுகள் தாமதமாகக் கூடாது. சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் நிர்வாக அணுகுமுறையை இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.