செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி கோப்புப்படம்
தமிழ்நாடு

ஜாமீன் கோரிய மனு: ‘உயர்நீதிமன்றத்தை நாடுங்கள்’ செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

PT WEB

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாகவும், அதன்மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி

இந்த ஜாமீன் மனுவை, ‘சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வாருங்கள்’ என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்ததுவந்தது அமலாக்கத் துறை. அதன்பின் ஆகஸ்ட் 12ஆம் தேதி 124 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

செந்தில் பாலாஜி

இதையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ரவி, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை ஆகஸ்ட் 28ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த செந்தில்பாலாஜியிடம் வழங்கியதுடன், அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

அதேசமயம் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜியின் மனுவை அமலாக்கத்துறை வழக்குகளுக்கான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார்.

இதன்படி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பட்டியலிடப்படாததால், முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் இன்று முறையிடப்பட்டது. அப்போது நீதிபதி, ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவித்துவிட்டார்.

உடனடியாக எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர்.

ஆனால் நீதிபதி, “அமலாக்கத் துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரவும்” என தெரிவித்தார். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.